தமிழ்க் கலை அறிவுக்கூடம் – பெல்சியம்: 19ஆவது ஆண்டு விழா

தமிழ்க் கலை அறிவுக்கூடம் – பெல்சியம்: 19ஆவது ஆண்டு விழா

பெல்சியம் நாட்டில் அன்வேப்பன் மாகாணத்தில் தமிழ்க் கலை அறிவுக்கூடத்தின் 19ஆவது ஆண்டு விழா மிகச்சிறப்பாக இடம் பெற்றது.

நிகழ்வின் ஆரம்பமாக ஈழப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் , நாட்டுப் பற்றாளர்கள் மற்றும் போரின் போது சாவடைந்த பொதுமக்கள் நினைவு கூரப்பட்டு பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கினைப் பள்ளியின் ஆசிரியர் திருமதி. சிந்துஜா ராஜ்குமார், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெல்சியம் கிளையின் பொறுப்பாளர் திரு.மார்க்கண்டு ரங்கநாதன், நடன ஆசிரியர் திருமதி. ம.சியாமி அவர்கள் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து, நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வினை ஆசிரியர் திருமதி கௌரி இமையகாந்தன் மாணவி செல்வி.ரத்திகா நவராசா ஆகிய இருவரு‌ம் தொகுத்து வழங்கினர்.

முதல் நிகழ்வாக இறைவணக்கம் இடம் பெற்றது. மாணவிகளினால் தமிழ்மொழி வாழ்த்து இசைக்கப்பட்டது.
வரவேற்புரையை செல்வி.சிவேகா சிவகுமார் வழங்கியமையை அடுத்து நடனம், நாடகம், கவிதை, பேச்சு எனப் பல கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

இவ்விழாவில் 2022 – 2023 கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வில் சித்தி அடைந்த மாணவர்களுக்கான சான்று வழங்கப்பட்டதைத் தொடர்ந்து,தமிழ்த்திறன் போட்டியிலும் வெற்றி பெற்ற மாணவர்கள்
மதிப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து செல்வி.அக்சயா ஜெசிகரன் அவர்களுடைய நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.